பொலிஸ் திணைக்களத்திற்கு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையிட்டு கொச்சிக்டை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்களுக்கான விசேட பொலிஸ் நடமாடும் சேவை கொச்சிக்கடை மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (24) காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற்றது.
கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தர்ம கீர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே, பிரதேசத்தின் பாடசாலை அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மஹரகமை புற்று நோய் வைத்தியசாலை வைத்தியர்களின் புற்று நோய் வைத்திய பரிசோதனை, மூக்குக் கண்ணாடி வழங்குதல், இரத்தப் பரிசோதனை, வைத்திய பரிசோதனை, இரத்ததானம் செய்தல் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு, காணாமல் போன அடையாள அட்டை, கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் போன்றவைகளை புதிதாக பெற்றுக் கொள்வதற்கு பொலிஸ் அறிக்கை வழங்குதல் என்பன இந்த நடமாடும் சேவையில் இடம்பெற்றன.
(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)


















